முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது - பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் மக்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதிஉள்ளார். அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தனது எதிர்ப்பை முதல்வர் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் வருமாறு:-

விவசாயிகளின் கருத்தை கேட்பது அவசியம்

கடந்த 27 -02 -2017 யன்று தங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தமிழகம் சார்பில் அதில் குறிப்பிட்டு இருந்தேன். காரணம் இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே அவர்களுடன் இத்திட்டம் குறித்து தேவையான ஆலோசனை நடத்தவேண்டியது மிக,மிக அவசியமாகும். தமிழகத்தில் இத்திட்டத்திற்கு டெல்டா பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காரணம் பெரும்பாலான இந்த திட்டங்கள் காவிரிடெல்டா மாவட்டங்களில் அமைந்துள்ளது. டெல்டா பகுதி என்பது வளமான ஒரு பகுதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே இத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டியது அவசியம். குறிப்பாக இத்திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்தை கேட்க வேண்டும். அப்போது தான் அவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் மத்திய அரசு கடந்த 16 - 01 - 2020 அன்று ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதை வெளியிடும் முன் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. எங்களின் கருத்துக்களை கேட்பதற்கு சந்தர்பமும் அளிக்கப்படவில்லை. எனவே காவிரி, டெல்டா பகுதியில் முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும்.

மத்திய அமைச்சருக்கும் கடிதம்

இந்த விஷயத்தில் மக்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது. இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதே போல் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திலும் தான் முன்பு 30 -03 -2017 அன்று எழுதிய கடிதம் குறித்து முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த துறையின் சுற்றறிக்கை மக்களுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து