முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 71-வது குடியரசு தின விழா: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கவர்னர் கொடி ஏற்றுகிறார்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

71-வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றி வைக்கிறார்.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா நடத்தப்படுகிறது.

விழாப் பகுதிக்கு காலை 7.55 மணிக்கு காரில் வந்திறங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காருக்கு முன்னும், பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வருவார்கள். காரில் இருந்தபடியே சாலையில் இருபுறமும் கூடியிருக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார்.  விழா மேடைக்கு வரும் அவரை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். அதை தொடர்ந்து காலை 7.57 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் காரில் வந்திறங்குகிறார். விழா மேடைக்கு வரும் கவர்னரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கொடிக்கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவும். அதைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர் போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண், பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண, சாரணியர் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்வார். அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச் சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்வர்  வழங்குகிறார். இந்த விழாவையொட்டி கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வீற்றிருக்கும் மேடையின் முன்பு, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்பட்ட துறைக்கு பரிசு வழங்கப்படும். சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் தனபால், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பல நாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். குடியரசு தினவிழாவை யொட்டி இன்று (26-ந் தேதி) தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து