முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 485 கோடியில் விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரூ. 485 கோடியில் விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும், தூத்துக்குடியில் ரூ.30 கோடியில் கடல் அரிப்பு சுவர்கள் ஏற்படுத்தப்படும் என்றும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

மீனவர்களின் நலனைப் பேணவும், மீன்பிடிப்பிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மீன்வளத் துறையில் பெரிய முதலீடுகளை அரசு செய்து வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் உதவித்தொகை வழங்குவதற்காகவும், மீனவர்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்காகவும், சிறப்பு உதவித் தொகை வழங்குவதற்காகவும் 2020 -21ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 298.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தொடர்பு கொள்ளவும், கண்காணிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடிவிசைப் படகுகளில் ஏற்கெனவே 507 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் 18 கோடி ரூபாய் செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். பாக். வளைகுடா பகுதி மீனவர்களுக்கான, 2,000 இழுவலை மீன்பிடிப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றிடும் சிறப்புத் திட்டம் 1,600 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, 500 தூண்டில் மற்றும் செவுள் வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன.

235 கோடி ரூபாய் செலவில், விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக் குப்பத்திலும், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில், நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையிலும் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில், 30 கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் வரும் ஆண்டில் அமைக்கப்படும்.  2020 - 21ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மீன்வளத் துறைக்கு 1,229.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து