முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

2020- 2021ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடந்து வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் நான்காவது நாளான நேற்று தமிழக சட்டசபையில் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் 7 பேரின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவே இறுதியானது என சுப்ரீம் கோர்ட்  தெரிவித்த பிறகும் 7 பேரை விடுதலை செய்வதில் தாமதம் ஏன் ?. கவர்னர் என்பவர் மாநில அரசின் அங்கமே தவிர, மத்திய அரசின் பிரதிநிதி இல்லை என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையில் மாற்றுக் கருத்து இல்லை. ஜெயலலிதாவின் எண்ணமும் அதே தான். கவர்னர் அதிகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என சட்டம் இல்லை. கவர்னரின் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட்டே  தெரிவித்துள்ளது. 7 பேரையும் விடுவிக்க அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்தையும் செய்து விட்டோம். அமைச்சரவை முடிவை பற்றி அரசும் கவர்னரிடம் தெரிவித்து விட்டது என்றார்.

அதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரிடம் கேட்டு சொல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்ததே ? என்றார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, நாங்கள் அக்கறையில் இருப்பதால் தான் தீர்மானம் நிறைவேற்றினோம். விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம். அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளோம். கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். கவர்னரின் நல்ல முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து