முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்க அனுமதி: பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.  இருந்தபோதிலும் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு 5.7.2020 வரை அமலில் இருக்க உத்தரவிட்டிருந்தேன்.  தற்போது, அதாவது 6.7.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.  தொலைபேசி மூலம் order செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9.00 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும்.  அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும். 

தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.  வணிக வளாகங்கள் (Malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படலாம். 

மற்ற செயல்பாடுகளைப் பொருத்தவரை, 19.6.2020க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன்.  பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து