முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரூ. 10,399 கோடியில் 8 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: 13,507 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்

திங்கட்கிழமை, 20 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னிலையில் நேற்று (20.7.2020) தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில்,  தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  

மேலும், புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது,  தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, தமிழக முதல்வர் தலைமையிலான உயர்நிலைக் குழு என பல வழிமுறைகள் ஏற்கனவே முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. 

தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் தொலைநோக்குப்  பார்வையுடன் தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்திய இது போன்ற பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற நிறுவனம், கோவிட் - 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.  

27.5.2020 அன்று, தொழில்துறை சார்பில், ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128  கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.  இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 

அதன்  தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று  8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 

தற்போது  நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  இத்திட்டங்களின் விவரங்கள் பின் வருமாறு:-

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், Vikram Solar நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Solar Cells & Modules  உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.   

இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த Solar Cells மற்றும் Modules,, இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், CGD Sathrai Pvt Limited நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

கோயம்புத்தூர் மாவட்டத்தில்,  200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub நிறுவனத்தின் Ductile Iron Foundry திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இராணிப்பேட்டை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், NDR Infrastructure நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், GI Agro Tech நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் (Cashewnut Processing) திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில்  - ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hiranandani குழுமத்தை சேர்ந்த Yotta நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ELGI Equipments நிறுவனத்தின்  Air Compressors உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில்,  40 கோடி ரூபாய் முதலீட்டில், JS Auto Cast நிறுவனத்தின் Foundry விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 8 திட்டங்களின் மூலம் 10,399 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.  

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல் மற்றும் செயல் இயக்குநர் மருத்துவர் அனீஷ் சேகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து