முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்காக தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்டம்: எக்டேருக்கு ரூ. 2,500 கிடைக்கும்

திங்கட்கிழமை, 20 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்கு தமிழக அரசின் ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் எக்டேருக்கு ரூ. 2,500 வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த ஊக்கத்தொகையை பெற விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாட்டு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில், தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழவகைப் பயிர்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாலும், வழக்கமான பயிர்களிலிருந்து நல்ல இலாபம் ஈட்டும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு விவசாயிகள் மாறி சாகுபடி மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 100 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் மக்கட்தொகைக்கேற்ப, உயர்ந்து வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவையினைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் விதி 110-ன்கீழ் ஆண்டு முழுவதும் காய்கறிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். 

இந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இடைப்பருவ காலத்தில் காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், எக்டருக்கு 2,500/- ரூபாய் வழங்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.           

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற, வழக்கமாக சாகுபடி செய்யும் பருவம் தவிர்த்து, பற்றாக்குறை ஏற்படும் பருவங்களில் அறுவடைக்கு வரும் வகையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை / நடவுச் செடிகளின் விலை பட்டியல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல் / மின் அடங்கலின் நகல் மற்றும் சாகுபடி மேற்கொண்ட வயலின் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ், ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சமாக 2 எக்டர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.  

தோட்டக்கலைத் துறையின் பிற திட்டங்களின் கீழ், மானியம் பெறாத விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர் ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும், இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மானிய உதவி கிடைப்பதற்கான பருவம், பயிர் மற்றும் இதர விபரங்களைப் பெற தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து