முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விழுப்புரம், திருவண்ணாமலையில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

விழுப்புரம் : கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

அந்த வகையில் இன்று (புதன்கிழமை) காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து விட்டு பிற்பகல் 2.30 மணிக்கு விழுப்புரத்திற்கு செல்கிறார். 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்படும் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அறையில் நடைபெறும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.   

இந்த கூட்டம் முடிந்த பின்னர் சிறு, குறு தொழில் முனைவோர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இக்கூட்டங்கள் முடிந்ததும் அவர் சிறப்புரையாற்றுகிறார்.  

முதல்வரின் வருகையையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதி மற்றும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கம் மற்றும் அரசு அலுவலக அறைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது. 

முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதையும் காவல்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து