முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை 14-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. 

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை.   

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீத உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் தமிழக சட்டசபைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள சட்டசபை கட்டிடம் பழமையான ஒன்று. உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர முடியாத வகையில் உள்ளதாக கருதப்பட்டு வேறு இடத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கில் பலர் இயங்க வேண்டும்.

கோப்புகளை எடுத்து வர வேண்டும், பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும். வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும்.

இதுபோன்ற பல பிரச்சினைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வசதி கலைவாணர் அரங்கில் உள்ளதால் அங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு சட்டசபை கூட்டம் செப்.14-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அலுவல் ஆய்வுக்குழுவும் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது, இதில் சட்டசபை கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. 

அதாவது, நாளை 14 மற்றும் 15,16 தேதிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.  கூட்டத்துக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் பெற்று வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

சட்டமன்றத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து