முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்: பட்டம் பெற்று வெளியே வருபவர்கள் சுயதொழில் துவங்க முன்வாருங்கள்: பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வெளியே வருபவர்கள் சுயதொழில் செய்ய முனைப்பு காட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியாவிலேயே உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றும் முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29–வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலமாக பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 29–வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

பட்டமளிப்பு விழா நிகழ்வு என்பது ஆண்டு முழுவதும் இரவு பகல் பாராமல் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதாகும்.

உங்களது பெற்றோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் இதுவாகும். ஆசிரியர்களுக்கும் அவர்களது உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும் என்றார் அம்மா.

மாணவர்களின் உயர்கல்வித் தேவையை உணர்ந்து, எம்.ஜி.ஆர். சுயநிதிக் கல்லூரிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அனுமதியளித்து, உயர்கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

அந்தப் புரட்சியில் உதித்த ஒன்றுதான் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம்.  பல்கலைக் கழகங்கள் அறிவுலகின் கோயில்கள். இங்கு மாணவர்கள் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வழிகாட்டப்படுகிறார்கள்.

இக்கல்விச் சேவையை சிறப்பாகச் செய்வதால்தான், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கில் மாணாக்கர்களைக் கல்வி பயில ஈர்க்கின்றது. 

இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 46 இளங்கலை மற்றும் 21 முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கும் 27 துறைகளில் ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் பயின்று வருகிறார்கள் என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சிஅடைகிறேன். 

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், சட்டமேலவை உறுப்பினராகவும் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவராகவும் மக்களுக்காக தொண்டாற்றியவர் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். 

ஜேப்பியார், தான் ஆரம்பித்த கல்வி நிறுவனத்திற்கு, தன்னை ஆளாக்கிய தலைவரின் தாயார் பெயரான சத்தியபாமா என்று பெயர் சூட்டியது, அவர் எம்.ஜி.ஆரின் மேல் கொண்டுள்ள விசுவாசத்தை தெளிவாக காட்டுகின்றது.

அவரது அயராத உழைப்பினால், கல்லூரி என்ற நிலையிலிருந்து, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு இந்நிறுவனம் உயர்ந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் மேலும் தழைத்தோங்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற விழிப்புணர்வு உடையவர் எவரோ, அவரே சிறந்த மனிதர்” என்றார் அண்ணல் அம்பேத்கர். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளைத் தத்தெடுப்பது, அந்த பள்ளிகளுக்கு நவீன உபகரணங்களை வழங்குதல், ஏழை மாணாக்கர்களின் கல்விக்கு உதவி செய்வது போன்ற பணிகள், சமுதாய முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற இந்த நிறுவனத்தின் உயர்ந்த எண்ணத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

கல்விச்சேவையில், இந்த நிறுவனம் இடையறாது ஆற்றி வரும் பணிகளுக்காக, அரசுத்துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து துணைக்கோள் ஒன்றினை விண்ணில் செலுத்திய செயல், இந்தப் பல்கலைக் கழகத்தின் தனித்துவத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற உள்ள 3,190 இளநிலை மற்றும் முதுகலை மாணாக்கர்களுக்கும், முனைவர் பட்டம் பெற உள்ள 129 ஆராய்ச்சி அறிஞர்களுக்கும், தங்கப் பதக்கம் பெற உள்ள 20 மாணவர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கு தடையின்றி கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் அம்மா. எனவே, அம்மாவைத் தொடர்ந்து, அம்மாவின் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். உயர்கல்வித் துறையில் அம்மாவாலும், அம்மாவின் அரசாலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.  2011–-12–ம் ஆண்டிலிருந்து 2019–-20–ம் ஆண்டு வரையில், 30 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.  2019–-20–ம் ஆண்டில் 14 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

2013–-14–ம் ஆண்டிலிருந்து 2018–-19–ம் ஆண்டு வரையில், 21 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  கடந்த 2012–-13–ம் ஆண்டிலிருந்து 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்த கல்வி நிலையங்கள் நகர மற்றும் கிராம மக்கள் எளிதில் சென்றடையும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

சென்ற 2011-12-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.  இதனால் உயர்கல்வி கற்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமீபத்தில் தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 பல்கலைக் கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சார்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன. 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணச்சலுகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, பின்தங்கிய மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை, இலவச பேருந்து அட்டை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிக்கும் மாணவர் வரை இலவச கல்வி போன்ற முன்னோடி திட்டங்களால் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. 

2020–-21–ம் ஆண்டு உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக 5 ஆயிரத்து 52 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் கல்வி மேம்பட அம்மாவின் அரசு இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அம்மாவின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக உயர்கல்வியில் சேரும் மாணாக்கர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

சமீபத்தில் கூட புதிய ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் தனியார் பல்கலைக்கழகங்களின் கட்டிடங்களுக்கு நான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தேன். மேலும், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவிட அம்மாவின் அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அமைதியான சூழ்நிலை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளம் அதிகமாக உள்ளதால், தற்போது பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அதிக அளவில் முன்னுக்கு வருகின்றன. மேலும், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்புகளின் மூலம் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியினை தொடங்கியுள்ளன. 

தற்போது, கொரோனா தொற்று நோயின் தாக்கத்தால், தொழில் துறையில் நிலவிவரும் மந்த நிலையிலும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  

சுயமாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பட்டம் பெற்று வெளியில் வருபவர்கள், சுயதொழில் தொடங்குவதற்கு முனைப்பு காட்ட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள்.உயர்ந்த சிந்தனைகள், உன்னத லட்சியங்கள், பரந்த மனப்பான்மை கொண்ட தொழில் நுட்ப வல்லுநர்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்களிடம் ஒரு ஐன்ஸ்டீன் இருக்கிறார், ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் இருக்கிறார், ஒரு நியூட்டன் இருக்கிறார்,

ஒரு சர். சி.வி. ராமன் இருக்கிறார், ஒரு சுந்தர் பிச்சை இருக்கிறார், ஒரு முதல்வர் இருக்கிறார், ஒரு பிரதமர் இருக்கிறார். இன்னும் வருங்காலத்தில் உலகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்க இருக்கும் மேதைகளும், நாட்டை வழிநடத்தும் தலைவர்களும் பலர் இங்கே இருக்கின்றீர்கள். 

எழுந்து நடந்தால், இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால், சிலந்தி வலையும் நம்மை சிறைப்பிடிக்கும் என்பதை பட்டம் பெற்று, புதிய உலகத்தில் அடியெடுத்தும் நீங்கள் உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம். 

எனவே மிகச் சிறந்த பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு கிடைத்துள்ள கல்வி சார்ந்த அடித்தளம், உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருக்கும். இங்கு கடுமையான உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் சிறந்த மதிப்பெண்களையும், பரிசுகளையும் பெற்றவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

மிகப்பெரிய அளவில் மதிப்பெண்கள் பெறாதவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்களுக்கு தேவையான எதையும் உங்களால் பெறமுடியும். நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இவ்விழாவில் இந்நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், சிறப்பு விருந்தினர் டாக்டர் மரிய ஜான்சன், துணை வேந்தர் டாக்டர் சசிபிரபா, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர், டாக்டர் அருண் குமார் பாதுரி, பதிவாளர் டாக்டர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து