முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி இன்று ராமநாதபுரம் வருகை: புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ராமநாதபுரம் : கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று 22-ம் தேதி ராமநாதபுரம் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தையும் இந்த கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை. இருப்பினும் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. சுமார் 10 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 54 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வந்தார்கள். தற்போது இந்த எண்ணிக்கை 46,703 ஆக குறைந்துள்ளது.

அதாவது 46,703 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பாதிப்பு இப்படி படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணியளவில்; பொதுப் பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பள்ளிக்கல்வித் துறை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பாக பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிதித் துறை (கருவூலம்) ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 

அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

அதன்பின்பு, சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயம் மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் முதல்வர் கலந்தாய்வு மேற்கொள்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராமநாதபுரம் வருகையையொட்டி அரசு சார்பிலும், கட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சார்பிலும் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து