முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பரவல், எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் போன்றவற்றால் பாராளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறையின்றி இரு அவைகளும் செயல்பட்டன.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, எம்.பி.க்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.  அதேபோல், பாராளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தினந்தோறும் துரித ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டது. இருந்தும், 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே, வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட போது மாநிலங்களவை துணை தலைவர் ஹர்வன்சை முற்றுகையிட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் முதல் அவையை புறக்கணித்துள்ளன. 

கொரோனா பரவல் மற்றும் எம்.பி.க்கள் அவை புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் மாதம் 1-ம்  தேதி முடிய வேண்டிய கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் நேற்று முன்தினம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய ஆலோசனையின்போது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி நேற்றுடன் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. 

இந்நிலையில் மாநிலங்களவை நேற்று காலை கூடியது. அப்போது, பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பி.முரளீதரன் பேசுகையில், பாராளுமன்றத்தை இன்று(நேற்று) காலவரம்பின்றி ஒத்திவைப்பதற்கு பரிந்துரை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கியமான பாராளுமன்ற அலுவல்கள் உள்ளன.

எனவே, நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது விவாதித்து நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற ஆலோசனைக் குழு  பரிந்துரை செய்தபடி நேரம் ஒதுக்கப்படும் என்றார். மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதால் அவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இருக்கைகள் காலியாக இருந்தன. 

ஆனால், ஆளும் தரப்பு எம்.பி.க்களைத் தவிர, ஒய்.எஸ்.ஆர், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள், குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு மசோதாவுக்கும் சில நிமிடங்கள் மட்டும் விவாதம் நடத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து