முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மேட்டூர் : தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 99.62 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 49 ஆயிரம் கனஅடியில் இருந்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை வந்தடைந்தது.  

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. அதாவது கடந்த 21-ம் தேதி காலை 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவு 89.92 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை இரவு மேலும் 3 அடி உயர்ந்து 96.87 அடியாக இருந்தது.  இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் குறைந்தது.

அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 49 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது. 

தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம்  நேற்று 99.62 அடியாகவும், நீர்இருப்பு 64.34 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையின் நீர்வரத்து 49 ஆயிரம் கனஅடியில் இருந்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 850 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து