முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

.!சென்னை : தமிழக முதல்வரின் சீரிய தலைமையின் கீழ் முதலீடுகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  தலைமையில், முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று  (21.10.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்வரின் தலைமையில் இதுவரை, 2 உயர்மட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 34 தொழிற்திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.  இதன்மூலம் தமிழ்நாட்டில் 15,000 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வணிகம் புரிதல் எளிதாக்குதலை மேலும் மேம்படுத்துவதற்காக,  பச்சை நிற வகை தொழிற்சாலைகள் நேரடியாக இயக்குவதற்கான இசைவு வழங்குதல் மற்றும்  திட்டம் சாராத பகுதிகளில், நிலப் பயன்பாட்டின் வகைப்பாடு   மாற்றம் செய்வதை ஒற்றைச் சாளர முறையில் சேர்த்து வணிக எளிதாக்குதல் விதிகளின் கீழ்  கருதப்பட்ட ஒப்புதல் (Deemed Approval) அளிக்கும் வகையில் கொள்கை சீர்திருத்தம் செய்ய உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது. இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தலைமையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. 

இதன்மூலம் 25,213 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 49,003 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது. நேற்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமான திட்டங்கள் ENES Textile Mills (RAMRAJ) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், Mobis India Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்,   Seoyon E-HWA Automotive India Private Limited  நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டம்,  Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்,   MRF Limited நிறுவனத்தின்  வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், Wheels India Limited நிறுவனத்தின்  மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Ather Energy நிறுவனத்தின்  மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம்,  Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின்  தொழிற்பூங்கா திட்டம் ஆகியவையாகும். 

இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.   

மேலும், இந்தக் கூட்டத்தில், ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை இனங்கள், தொழில் தோழன் தகவு மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடர்புடைய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 

 

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே. கோபால், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல், நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சல், தொழில் துறை ஆணையர் அனு ஜார்ஜ், நகர் ஊரமைப்பு இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முருகேஷ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து