முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: சென்னை அணி வெற்றி: பஞ்சாபின் பிளே ஆப் கனவு தகர்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 1 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது. சென்னை அணியை பொருத்தவரை ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டது. 

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சிறப்பான துவக்கம் பெற்றது.

5.1 ஓவரில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல் ராகுல் -மயங்க் அகர்வால் ஜோடி பிரிந்தது.  சென்னை அணியின் பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

அபாயகரமான பேட்ஸ்மேன் கெய்ல் (12 ரன்கள்) இம்ரான் தாஹிர் பந்தில் எல்.பி டபிள்யூ ஆனார். இதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் பஞ்சாப் அணியின் ரன்வேகம் மட்டுப்பட்டது.

ஆனால், தீபக் ஹூடாவின் (30 பந்துகளில் 62 ரன்கள்) விஸ்வரூப ஆட்டத்தால் பஞ்சாப் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 6   விக்கெட்டுகள் இழப்புக்கு 153  ரன்கள் எடுத்துள்ளது.

பந்து வீச்சை பொருத்தவரை நிகிடி அதிகபட்சமாக 39 ரன்கள் விட்டுக்கொடுத்து   3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சென்னை அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து எளிதில் வெற்றி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததன்  மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து