முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு நேரில் ஆய்வு செய்து விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று  முன் தினம் மாலையில் அதி தீவிர புயலாக வலுவடைந்தது. 

அதி தீவிர புயலாக மாறிய பின்னர் கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. 

அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது. 

கரையைக் கடந்தது

இரவு 10.45 மணிக்கு அதி தீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது, நேற்று அதிகாலைக்குள் புயலின் முழுப்பகுதியும் கடந்தது. 

புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது. 

இந்த புயல் கரையை கடந்த பின்னர், அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழை காரணமாக சென்னை மட்டுமின்றி கடலூர், புதுச்சேரியிலும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் காற்றுடன் பெய்த கனமழையால் புதுச்சேரி, கடலூரில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

முதல்வர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக பிற்பகலில் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், பலத்த காற்றால் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி - கீழ்க்குமாரமங்கலம் கிராமப் பகுதிகளில் புயலால் சேதமடைந்துள்ள வாழைத் தோப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். 

நிவாரண பெட்டகம் வழங்கிய முதல்வர்

தேவனாம்பட்டினம், அரசு முகாமில் புயல் மற்றும் மழைநீரினால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார்.  மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

மீனவர்களிடம் குறைகேட்டார்

கடலூர் மாவட்ட மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அவர்களுடைய படகுகளையெல்லாம் கடலூர், முதுநகர் துறைமுகப் பகுதியில் பத்திரப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மீனவ கிராம மக்களைச் சந்தித்து அவர்களிடம் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக் கொண்டதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் பணியினரிடமும் மீட்புப் பணி நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், கலெக்டர் மற்றும் வேளாண் துறை செயலாளர் உள்ளிட்டோரும் சென்றனர். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து