சென்னை : சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்
ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காலை 10.45 மணிக்கு அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதால், இதில்அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி அம்மாவை நினைவு கூர்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என தன்வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன் என கூறி இருந்தார்.