முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

புதன்கிழமை, 9 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் டி.வி. தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.  இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.  இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார். 

குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற்பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். 

இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து