முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஞானதேசிகன் மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மூத்த அரசியல்வாதியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணை தலைவரும்,முன்னாள் மாநிலங்களவை  உறுப்பினருமான பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று (15.1.2021) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். 

ஞானதேசிகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர். பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர்.

கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.  நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்  ஞானதேசிகன். 

ஞானதேசிகனின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து