முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் அதிகாரி சாகு: தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் : அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி சோழிங்கநல்லூர்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க மற்றும் ஏற்கனவே உள்ள பெயர்களை நீக்க ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெறும்.  அதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ம்  தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதற்காக முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருத்தப்பணிகள் தொடங்கின.

1.1.2021 தேதியை 18 வயது தகுதி நாளாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பட்டியலில் பெயர்களை சேர்க்கும்படி 21 லட்சத்து 82 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  அதே போல 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இறப்பு, மாறுதல், போலி பெயர்கள் போன்ற காரணங்களால் அவர்கள் நீக்கப்பட்டனர்.   

பட்டியலில் திருத்தம் செய்வதற்காக 3 லட்சத்து 32 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 292 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.   ஒரே தொகுதியில் மாற்று முகவரியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய கேட்டு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 791 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 365 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் திருத்தப்பட்ட இறுதிப் பட்டியலை நேற்று தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.  மாநிலத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் உள்ளர். இதில் ஆண்கள் - 3,08,38,473 பேர். பெண்கள் - 3,18,28,727 பேர்.  அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதியாகும். இதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,94,895 பேர் ஆகும்.  குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி சென்னை துறைமுகத் தொகுதி எண்ணிக்கையாகும். இதில் 1,76,272 பேர் உள்ளனர். 

இது குறித்து சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1.1.2021ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடியவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2021ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள்  வெளியிடப்பட்டுள்ளன.  சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 21,82,120 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 21,39,395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 5,09,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 3,32,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 3,09,292 ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,84,791 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,75,365 ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.  

2021-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6,26,74,446 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,48,262; பெண்கள் 3,46,476; மூன்றாம் பாலினத்தவர் 107).  தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட் ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,76,272 ஆவர். (ஆண்கள் 91,936; பெண்கள் 84,281; மூன்றாம் பாலினத்தவர் 55).  வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம், 2021-ம் காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.  இதுவரை, 4,62,597 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

2021-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18–19 வயதுள்ள 8,97,694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 4,80,953; பெண்கள் 4,16,423; மூன்றாம் பாலினத்தவர் 318)  வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in  என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் தங்கள் பெயரைச் சரிபார்க்கலாம். 

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 1.1.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம் :-

வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.  இணையம் மூலமாக ww.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.  கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘Voter Helpline App\ செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட தொடர்பு மையங்களை @@1950″ என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் இம்மையங்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து