முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் வரும் 26-ம் தேதி காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.  ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.  

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி  மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில்  கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின்  வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில்  நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில்  இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து