முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர் நலத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில் முதற்கட்டமாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.  மேலும், 3 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையக் கட்டிடம், நாமக்கல் மற்றும் வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகளுக்கான வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். 

கடந்த 28.11.2019 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்க விழாவில், வாணியம்பாடியில் தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்திட  புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  அந்த அறிவிப்பிற்கிணங்க,  தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்தும் வகையில் வாணியம்பாடியில் உள்ள சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான 1.15 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில் முதற்கட்டமாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம், ஆண்டு தோறும் சுமார் 2,000 நபர்கள் தோல் பதனிடும் பிரிவில் உயர் திறன் பயிற்சி பெற்று, வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையக் கட்டிடம், 

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மெஷினிஷ்ட் என்ற புதிய தொழிற்பிரிவுக்கு 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம், 

சென்னை, வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிஷியன் மற்றும் ஏசி மெக்கானிக் ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு  66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம் என மொத்தம் 9 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் - ஆனைக்கட்டி, திருவண்ணாமலை மாவட்டம் - ஜமுனாமரத்தூர், சேலம் மாவட்டம் - கருமந்துறை, நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை மற்றும் நீலகிரி மாவட்டம் - கூடலூர் ஆகிய இடங்களில் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர்களின் திறன், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்புத் திறன், தொழிற்பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்திட தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் M/s. TITAN நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி. வீரமணி, டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம்,  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (பொறுப்பு) வீர ராகவ ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து