முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் தனியார் நிறுவனத்தில் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 18 மணி நேரத்தில் பிடிபட்டனர்: கொள்ளையர்கள் கைது : காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பாராட்டு

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஓசூர் : ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ம.பி.,யை சேர்ந்தவர்கள் ஐதராபாத் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிதி நிறுவனம் 4 வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இங்கு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.  ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள அந்த நிதி நிறுவனத்தின் மேலாளராக கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த சீனிவாச ராகவா (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது வாடிக்கையாளர்கள் போல 6 பேர் கொண்ட கும்பல் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்தது. கையில் துப்பாக்கிகள் மற்றும் கத்தியுடன் வந்த அவர்கள் துப்பாக்கியை காட்டி நிதி நிறுவன மேலாளர் சீனிவாச ராகவா மற்றும் ஊழியர்கள் மாருதி (24), பிரசாத் (29), காவலாளி ராஜேந்திரன் (55) மற்றும் வாடிக்கையாளரான ஓசூர் பஸ்தி பகுதியைச் சேர்ந்த ராஜூ (22) ஆகியோரை தாக்கி கை, கால்களைக் கட்டிப்போட்டனர். மேலும் ஊழியர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்திரி ஒட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் நிதிநிறுவன லாக்கரின் சாவியை வாங்கி அதிலிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.   கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பிறகு நிதி நிறுவன ஊழியர்கள் கை, கால்கள் கட்டுகளை அவிழ்த்து இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கொள்ளை சம்பவம் நடந்த நிதி நிறுவனத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். மேலும் நிதி நிறுவன வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கொள்ளையர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி வந்திருந்தனர். முகமுடியும் அணிந்து இருந்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாக்கரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் பைரவி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் இதைப் போல நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இந்தியில் பேசிக் கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர் கள் என்றும் கூறப்படுகிறது. கொள்ளையர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். . இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

இதனிடையே கொள்ளைக்கும்பல், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது.  மேலும், ஆனேக்கல் அருகே பஸ்திபூர் என்ற இடத்தில் அவர்கள் ஓசூர் நிதி நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசராகவிடம் பறித்த செல்போனை, வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்தது. 

மேலும் அங்கு கிடந்த காலி பை ஒன்றையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.  தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு பையை எடுத்து அதில் நகைகளைப் போட்டு கொண்டு தப்பி சென்று உள்ளனர். அந்த பை ஜி.பி.எஸ். டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்ட பை ஆகும். இதன் மூலம் அந்த பையை கொள்ளையர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிக்கு சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.  

இதற்கிடையே அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து சிக்னலை ஆராய்ந்த போது, கர்நாடகாவிலிருந்து சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பைகளை வைத்துக் கொண்டு ஐதராபாத் சென்றது தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஐதராபாத்தில் 7 பேரை கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.   7 பேரும் மத்தியபிரதேசம் . ஜார்கண்டை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

இந்த நிலையில் ஓசூர் கொள்ளை விவகாரத்தில் 18 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தமிழக காவல்துறையினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், 

தமிழக காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து