டெல்லி. ஜன. 26. கடலுக்குள் மணல் திட்டாக உள்ள, ராமர் சேது பாலத்தின் தோற்றம், வயது குறித்து தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே ராமர் சேது பாலம் எனப்படும் பெரும் மணல் திட்டு அமைந்துள்ளது. 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டு, பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. புராண கதைகளின் காரணமாக, ராமர் சேது பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். அதன் அடிப்படையிலேயே ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் ராமர் சேது பாலம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் (என்.ஐ.ஓ) ஆகிய இரு அமைப்புகளும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ராமர் சேது பாலத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரியதன் அடிப்படையில் தொல்லியல் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.