சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 58 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நினைவிடம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 28–ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அந்த இடத்தில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்தது. இந்தப் பணிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறை மேற்கொண்டது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் பார்வையிட்டார். இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். மேலும் இதில் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ள போயஸ் தோட்ட இல்ல திறப்பு விழா நாளை (28–ம் தேதி) நடைபெறுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை 28–ம் தேதி காலை 10.30 மணி அளவில் திறந்து வைக்கிறார்.