முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் எச்1பி விசா பதிவு அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகளவில் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

ஆனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் எச்1பி உள்ளிட்ட விசாக்கள், நிரந்தர குடியுரிமை அட்டை ஆகியவற்றுக்கு தடை விதித்தார்.

பின்னர் இந்த தடையை மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இதற்கிடையே டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவதற்கு 2 வாரங்கள் இருக்கும் நிலையில் எச்1பி விசாக்கள் ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

விசா ஒதுக்கீட்டில் குலுக்கல் முறைக்கு பதிலாக விண்ணப்பதாரர்களின் தகுதி, ஊதியம், பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்ற நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு வருகிற மார்ச் 9-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

இதற்கிடையே புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோபைடனின் நிர்வாகம் எச்1பி விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக தெரிவித்தது.

எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என்று ஜோபைடன் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இந்த உத்தரவால் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் 2022-ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட்ட அறிக்கையில், எச்1பி விசா விண்ணப்பிப்பதற்கான பதிவுகள் வருகிற மார்ச் 9-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதி வரை நடைபெறும். மார்ச் 31-ந் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து