முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்: அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை, 1 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என திருக்கோவிலூர் தொகுதி பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து  நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள்.  இந்த தேர்தலானது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிரிலுள்ள ஊழல் கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நான் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாக வேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். ஏழை மக்களுக்காக பணியாற்றியவர்கள் என நாடு முழுவதும் ஒருவருக்கு பெருமையை கொடுக்க வேண்டும் என்றால் அது எம்.ஜி.ஆரையே சாரும். அதன்பிறகு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் பின்தொடர்ந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளார். ஜெயலலிதா, ஒரு பெண்மணியாக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நமக்கெல்லாம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பற்றி தெரியும். லஞ்சம், லாவண்யம், ரவுடியிசம், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவற்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் எம்.ஜி.ஆர். வழியில் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் நல்ல பாதையில் தமிழகத்தை கொண்டு செல்லும். 

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். ஏற்கனவே முந்தைய காலங்களில் கூட ஜெயலலிதாவை பற்றி இது போன்ற பல அவதூறு கருத்துகளைச் சொல்லியுள்ளனர்.  நான் தமிழக மக்களிடம் கேட்க விரும்புவது என்னவெனில், பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழக மக்களை பற்றி கவலையில்லை. சோனியா காந்திக்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமே கவலை. ஆனால் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது.  தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது. இவ்வாறு அமித்ஷா பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து