முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் - 2 செய்முறைத் தேர்வு வரும் 16-ம் தேதி தொடக்கம் : 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து, செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி வாரியத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தோ்தலையொட்டி தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கின.  பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 3-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக அந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வு வரும் 16-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் தோ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால், திட்டமிட்டபடி தேர்வை நடத்தவே தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்தான், செய்முறைத் தேர்வின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செய்முறைத் தேர்வுக்கு முன்னதாகவும் முடிந்த பிறகும் கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.  செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்தே வைத்திருக்க வேண்டும். 

ஒவ்வொரு மாணவர் குழுவின் செய்முறைத் தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறையைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். செய்முறைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.  சானிடைசர் அருகே தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது. வேதியியல் ஆய்வகங்களில் திரவங்களை வாய் மூலம் உறிஞ்சி எடுக்கப் பயன்படுத்தப்படும் பிப்பெட் கருவியைப் பயன்படுத்த வேண்டாம்.

அதற்குப் பதிலாக திரவங்களை எடுக்க பியூரெட் அல்லது வேறு குழாய்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றின் மூலம் துல்லியமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றுக்கேற்ப ஆய்வு மதிப்புகளை மாற்றிக் கணக்கிட்டு வழங்கலாம்.

கைகளில் சானிடைசர் பயன்படுத்தி இருப்பதால் எளிதில் தீப்பிடிக்கும் கருவிகளைக் கையாள்வதற்கு முன் ஆசிரியர்களும் மாணவர்களும் கைகளை நன்கு கழுவ வேண்டும். இயற்பியல் ஆய்வகங்களில் ஒளி ஊடுருவும் கருவிகள் மற்றும் மைக்ரோஸ்கோப், ஸ்பெக்ட்ரோமீட்டர் முறைகளையும் மேற்கொள்ள வேண்டாம்.

தாவரவியல் மற்றும் உயிரியல் செய்முறைத் தேர்வுகளிலும் மைக்ரோஸ்கோப் பயன்பாடு கூடாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கும், தொற்று குணமடைந்த பின் வேறு ஒரு நாளில் செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து