முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு

திங்கட்கிழமை, 10 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த 7-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில், இன்று 11-ம் தேதியன்று தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கவுள்ளனர். நாளை 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதனிடையே, கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். 

1989, 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், திருவண்ணாமலை சட்டசபை தொகுதியிலிருந்து, தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டசபைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு.பிச்சாண்டி ஆவார்.  தற்காலிக சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், 

கவர்னர் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார். அவர், திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் முன் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்ற கு.பிச்சாண்டி இன்று தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 234 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து