முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது: பார்லி.யில் நிதின் கட்கரி தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

உச்சநீதிமன்றம் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகள், உள்ளாட்சி அமைப்புகளில் 20,000 மக்கள் தொகை உள்ள பகுதியாக இருந்தால் 220 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது.

அதன்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் 185-வது பிரிவின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது.

அதோடு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.

மதுக்கடைகள் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மதுக்கடைகள் அகற்றப்பட்ட தரவுகளை மத்திய அரசு சேகரிக்கவில்லை.

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அமல்படுத்த, நவீன பேருந்து நிலையங்கள் உருவாக்கும் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க, இத்திட்டம் நிதியுதவி அளிக்கும். இதற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் 2018 செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிதின் கட்கரி தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து