முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பல்கலை. விவகாரத்தில் சி.வி.சண்முகம் தனியாக போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 31 ஆகஸ்ட் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

விழுப்புரம் : ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனியாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு, துணைவேந்தர் நியமனமும் நடைபெற்றது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தன்னந்தனியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை விழுப்புரம் மேற்கு போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இத்தகவலை அறிந்த அ.தி.மு.க.வினர், காந்தி சிலை அருகே திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்து அதே தனியார் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் அமர வைத்தனர்.

 

சி.வி.சண்முகம் தனியார் மண்டபத்தில் தனியே இருக்கையில், அவரது ஆதரவாளர்கள் வெளியே அமரவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து