முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம், ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

தமிழகத்தில் சட்டம்‌ - ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம்‌ செலுத்தி, சட்டம்‌- ஒழுங்கைச் சீரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஒரு மாநிலம்‌ வளர்ச்சி‌ பெற வேண்டுமெனில்‌, அந்த மாநிலத்தின்‌ மக்கள்‌ வளம்‌ பெற வேண்டுமெனில்‌, மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைய வேண்டும்‌. மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைவதற்கு மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, சிறந்த ஆரோக்கியம்‌ எனப் பல்வேறு காரணிகள்‌ இருந்தாலும்‌, இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணியாக விளங்குவது அமைதியான சூழல்‌.

மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக் குந்தகம்‌ ஏற்படும்‌ மாநிலங்களில்‌ பொருளாதார வளர்ச்சிக்கு இடம்‌ இருக்காது. ஏனெனில்‌, அமைதி குன்றிய மாநிலங்களில்‌ தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும்‌, புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும்‌ தொழில்‌முனைவோர்கள்‌ முன்வரமாட்டார்கள்‌ என்பதோடு, அந்த மாநிலத்தில்‌ உள்ள மக்களும்‌ தங்களைத்‌ காத்துக்‌ கொள்வதிலேயே நேரத்தைச் செலவிடவேண்டிய சூழல்‌ ஏற்படுமே தவிர, பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ நடவடிக்கைகளில்‌ தங்களை ஈடுபடுத்திக்‌ கொள்ள இயலாது.

தமிழகத்தை பொறுத்தவரையில்‌, சட்டம்‌-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள்‌ ஒருபுறம்‌ எடுக்கப்பட்டு வந்தாலும்‌, கொரோனா தொற்று நோய்‌ பாதிப்பு ஓரளவு கட்டுக்குள்‌ இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில்‌, கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

வாணியம்பாடி, சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமம், திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலை மற்றும் கோபாலசமுத்திரம், ராணிப்பேட்டை மாவட்டம்‌, தப்பூர்‌ கோவிந்தாங்கல், ‌ விழுப்புரம்‌ மாவட்டம்‌, காரணை கிராமம், சிவகங்கை அருகே கல்லுப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம்‌, வீரானந்தல், கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சீலேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மனிதாபிமானமற்ற கொடூர கொலை‌ சம்பவங்களுக்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இது மட்டுமல்லாமல்‌, சட்டம்‌- ஒழுங்கை நிலை நாட்டும்‌ பணியில்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கும்‌ காவல்‌துறையினரையே திருப்பித்‌ தாக்கும்‌ சம்பவங்களும்‌ ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள்‌ தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம்‌ பாதிக்கும்‌ என்பதில்‌ எள்ளளவும்‌ சந்தேகம்‌ இல்லை.

 

எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும்‌ அமைதியான சூழலை உருவாக்கிடும்‌ வகையில்‌, முதல்வர்‌ சட்டம்‌ - ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம்‌ செலுத்தி, சட்டம்‌- ஒழுங்கைச் சீரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்கவும்‌, கொலைக்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோரை சட்டத்தின் முன்‌ நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்‌ தரவும்‌ அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌கொள்கிறேன்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து