முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உ.பி. அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி : வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவும் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டதில் உ.பி.அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை என்று சுப்ரீம் கோர்ட் நேற்று அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை சி.பி.ஐ.க்கு இப்போதைக்கு மாற்ற முடியாது எனவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராடினர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பா.ஜ.க ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 9பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. லக்கிம்பூர் கெரி வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்கள் விவரம், முதல்த கவல் அறிக்கை எத்தனை பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்த அறிக்கையை உ.பி. அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உ.பி. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆஜராகினார். அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ லக்கிம்பூர் கெரி கலவர விவகாரத்தில் உ.பி. அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை. பொறுப்பான அரசு, போலீஸாரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது, சிலருக்கு குண்டுகாயம் ஏற்பட்டுள்ளது.

உ.பி. அரசு உங்களிடம் என்ன செய்தியை சொல்லி அனுப்பியுள்ளார்கள். சாதாரண சூழலில் போலீஸார் உடனடியாகச் செல்லமாட்டார்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவும் மாட்டார்கள். இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த வழக்கில் எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஐ.பி.சி 302 பிரிவில் கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள். இப்படித்தான் மற்ற வழக்கிலும் நடந்து கொள்வீர்களா ? இந்த வழக்கை இப்போதே சி.பி.ஐக்கு மாற்ற முடியாது. வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் ” எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து