முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி: ராஜஸ்தான் முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில், டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்கள் தீபாவளியின் போது பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தன. இதை சுட்டிக்காட்டி அந்த மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக தடை விதித்ததை ஏற்க முடியாது என்றும், இந்தத் தடையை பிற மாநிலங்களும் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் சிவகாசி நகரில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.

எனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என 4 மாநில முதல்வர்களையும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில் ராஜஸ்தானில் பசுமை பட்டாசு வெடிக்க அம்மாநில முதலமைச்ச அசோக் கெலாட் அனுமதி அளித்துள்ளார். தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு இரவு 11.55 முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து