Idhayam Matrimony

மாநகராட்சி தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்லக்கூடாது: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

வியாழக்கிழமை, 28 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

மாநகராட்சி தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக் கட்சிக்கு  செல்லக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இதுபற்றி கட்சி தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அ.தி.மு.க. தலைவர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து திடீரென ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சேலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது எவ்வாறு பூத் கமிட்டி அமைத்து பணியாற்றினோமோ? அதே போல மாநகராட்சி தேர்தலிலும், பணியாற்ற வேண்டும், அத்தேர்தலில் கூட சில இடங்களில் சிறப்பாக பணியாற்றவில்லை என்றாலும் வெற்றி பெற்று விட்டோம்.

தமிழ்நாட்டிலேயே சேலம் மாநகராட்சிக்கு அதிக நிதியை ஒதுக்கி நமது ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம், நாம் செய்த திட்டங்கள் குறித்து வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்து கூற வேண்டும். நம்மிடம் வேற்றுமை இருக்க கூடாது, ஒரு வார்டில் ஒருவருக்கு தான் சீட் கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர்கள் மாற்று கட்சிக்கு செல்வதோ, சுயேட்சையாக நிற்கவோ கூடாது, இன்னும் 10 நாளில் பகுதி செயலாளர்களை அழைத்து பேசுவேன்.

பூத் கமிட்டி அமைத்து அதில் அவர்களது பெயருடன் செல்போன் நம்பரையும் வைத்திருக்க வேண்டும், காலையில் 2 பகுதி, மாலையில் 2 பகுதி என பூத் கமிட்டியை அழைத்து நானே பேசுவேன். எனக்கு வயிற்று வலி இருக்கிறது. வலியையும் பொருட்படுத்தாமல் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் நமக்கு வெற்றி முக்கியம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டாம், ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். தீயில் சுட்ட புண ஆறி விடும், கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணர வேண்டும், யாரையும் தவறாக பேச வேண்டாம், அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெற வேண்டும்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து