முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரம்: வரும் 9-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : 5 மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது

செவ்வாய்க்கிழமை, 2 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் வரும் 9- ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

எப்பொழுதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.  

தென் தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றில் ஓடிவரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் ஆகும். 

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கப்பட்டு, அந்தத் தண்ணீர் மேற்சொன்ன 5 மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டதன் காரணமாகத் தான் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்தது; வறுமை நீங்கியது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு விவசாய வேலை வாய்ப்புகள் கிடைத்தன. எனவே, முல்லைப் பெரியாறு அணையும், அதில் தேக்கப்படும் தண்ணீரும் தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாய் விளங்குகின்றன என்பதை எப்பொழுதும் நினைவிற்கொண்டு தமிழ் நாடு அரசு செயல்பட வேண்டும். 

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு உரியது என்பதையும்; அந்த அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும், அது எப்பொழுதும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்பதையும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படுவது சாத்தியமானது என்பதையும், அதன் விளைவாக, தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பெரும் பயனடையும் என்பதையும், அசைக்க முடியாத புள்ளி விபரங்களோடு சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைத்து, வாதிட்டு, வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 

அவர் மேற்கொண்ட அந்த மாபெரும் முயற்சியின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்ற உறுதியான தீர்ப்பை 15 ஆண்டுகளுக்கு முன்னரே சுப்ரீம் கோர்ட் அளித்தது. அணையின் உறுதித் தன்மையை மேலும் நிலைநாட்டிக்கொண்டு, 152 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. 

தொடர் சட்டப் போராட்டம் நடத்தி பெறப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, இன்றைக்கு கேள்விக்குறியாகி இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது. 

கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக் கொண்டு தமிழ் நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த் தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகனுக்கு  நினைவூட்டுகிறோம்.

காவேரி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும்; பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை தி.மு.க. அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினைக் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வருகின்ற 09.11.2021 - செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து