முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை கொலை செய்ய முயற்சி: ஈராக் சென்றார் ஈரான் ராணுவ ஜெனரல்

செவ்வாய்க்கிழமை, 9 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஈராக் பிரதமரை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்ய நடந்த முயற்சியைத் தொடா்ந்து, ஈரானின் ராணுவ ஜெனரல் ஈராக்குக்கு சென்றுள்ளார். டிரோன் தாக்குதலில் ஈரானுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என அவா் கூறியதாக ஈராக்கை சோ்ந்த அதிகாரிகள் இருவா் தெரிவித்தனா். 

ஈராக் தலைநகா் பாக்தாதில் பிரதமா் அல்-காதிமியின் இல்லம் உள்ளது. பாதுகாப்பு மிக்க இந்த இல்லத்தில் பிரதமரை படுகொலை செய்யும் நோக்கில் டிரோன் (ஆளில்லி சிறு விமானம்) மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பிரதமா் மற்றும் அவரது பாதுகாவலா்கள் இருவா் காயமடைந்தனா். 

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஆயுதக் குழுவினா் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், இத்தாக்குதல் நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில், ஈரானின் ராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி ஈராக் தலைநகா் பாக்தாதுக்கு நேற்று முன்தினம் சென்றார். இவா், நாட்டுக்கு வெளியே ஈரான் நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ரகசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ‘குட்ஸ்’ படைப் பிரிவின் கமாண்டா் ஆவாா்.

பாக்தாத் சென்ற ஈரான் ராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி, பிரதமா் மீதான கொலை முயற்சியில் ஈரானுக்கு எந்தத் தொடா்பும் இல்லை எனத் தெரிவித்தாா். ஈராக்கின் அடுத்த பிரதமராக ஷியா ஆயுதக் குழுவினா் பரிந்துரைக்கும் எந்த அரசியல்வாதிக்கும் ஈரான் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என அவா் கூறினாா். மேலும், பிரதமா் அல்-காதிமி, அதிபா் பா்ஹம் சாலிஹ் ஆகியோரையும் அவா் சந்தித்தாா் என்று ஈராக் அரசியல்வாதிகள் தெரிவித்தனா். முன்னதாக, ஈராக் பிரதமா் மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. மறைமுகமாக அமெரிக்காவையும் குறைகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து