முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நீலகிரி, குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளதாக விபத்து குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் வெலிங்டனை அடைவதற்கு 12 நிமிடங்களுக்கு முன் விபத்துக்குள்ளானது என்றும் அவர் தெரிவித்தார்.

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று முன்தினம் காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நஞ்சப்பசத்திரம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் பயணித்த தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில் பிபின் ராவத் மறைவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அவர் விவரித்தார். அப்போது ராஜ்நாத் பேசியதாவது:

கோவை சூலூரில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பியுள்ளனர். வெலிங்கடனில் தரையிறங்குவதற்கு 12 நிமிடங்களுக்கு முன்னதாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடப்பற்கு முன்னர் கட்டுப்பாட்டை இழந்த உடன் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் செயற்கை சுவாச உதவியுடன், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை மோசமாக உள்ளது. தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து பெங்களூரு கமாண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்.  அவருக்கு தற்போது உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான விசாரணை துவங்கியுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெறும். விசாரணை குழு வெலிங்டன் சென்றடைந்தனர். அவர்கள் விசாரணையை தொடங்கிவிட்டனர்.

 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்படும். அதுபோல் மற்ற வீரர்களின்  இறுதிச் சடங்குகளும் ராணுவ மரியாதையுடன் நடைபெறும்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து