முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்து: 12 மணி நேரம் நீந்தி கரையேறிய மடகாஸ்கர் அமைச்சர் கெல்லே

வியாழக்கிழமை, 23 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

அண்டனானரிவோ : கப்பல் கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மடகாஸ்கர் அமைச்சர் செர்ஜ் கெல்லே சுமார் 12 மணி நேரம் நீந்தி கரையேறினார். 

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், கடந்த செவ்வாய்க் கிழமை இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த  விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காணாமல் போன 20 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை அமைச்சர் செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு போலீசாரும் சென்றனர். ஆனால் இந்த ஹெலிகாப்டர் மீட்பு பணி நடைபெறும் பகுதியில் பறந்த போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. 

இந்நிலையில், அமைச்சர் செர்ஜ் கெல்லே மற்றும் ஒரு காவலர் ஆகியோர் சுமார் 12 மணி நேரம் நீந்தி நேற்று முன்தினம் காலை கடலோர நகரமான மஹம்போவில் தனித்தனியாக கரையேறினர். அப்போது அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கடலில் விழுவதற்கு முன்பாக, இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பியதாக துறைமுக அதிகாரசபை தலைவர் தெரிவித்தார்.  ஹெலிகாப்டரில் பயணித்த மேலும் 2 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கரையேறிய அமைச்சர் செர்ஜ் கெல்லே, ஈசி சேரில் படுத்திருந்தபடி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதுபற்றி காவல்துறை தலைவர் ரேவோவரி கூறுகையில், 

 

காவல்துறை அமைச்சர் கெல்லே ஹெலிகாப்டரின் இருக்கையை மிதக்கும் சாதனமாக பயன்படுத்தி நீந்தி வந்துள்ளார். அவர் எப்போதும் விளையாட்டின்போது, நீண்டநேரம் தாக்குப்பிடிக்கும் ஸ்டமினா கொண்டவர். முப்பது வயது வாலிபரைப் போன்று இப்போதும் அதே உடற்திறனுடன் இருக்கிறார். அவர் எஃகு நரம்பு கொண்டவர் என்றார்.  30 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிய கெல்லே, கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை மாற்றத்தின்போது, காவல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து