முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதா இல்ல விவகாரம்: அ.தி.மு.க.வின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 5 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அ.தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24-ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப், 

நிலம் கையகபடுத்தப்பட்டதில் நடைமுறை தவறுகள் உள்ளதா, பொதுப் பயன்பாடு உள்ளதா, அப்படி பொதுப் பயன்பாடு இருந்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் தொடர அரசுக்கு உத்தரவிட முடியுமா என்ற கேள்விகள் எழும்பியதாக கூறி அவற்றுக்கு தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை ஆய்வு செய்ததில் தனியார் சொத்து என்ற முறையில் அதன் உரிமையாளரின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் நிலையை ஏற்றுக் கொள்ளாமல் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

மேலும், நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பொதுப் பயன்பாடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆட்சியில் இருந்ததால் தீபா, தீபக் ஆகியோரின் வழக்கை எதிர்கொண்டதாகவும், தற்போதைய அரசு மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றதை நாடியதாகவும் அ.தி.மு.க. கூறுவதை ஏற்க முடியாது. நடைமுறை தவறுகள் உள்ளதாலும், பொதுப் பயன்பாடு இல்லை என்றும், உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என கூறி அ.தி.மு.க. வின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தனி நீதிபதி உத்தரவை ஏற்று வாரிசுதாரர்களிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கும்படி அரசுக்கு உத்தரவிடுவது முறையாக இருக்காது என்றும், ஏற்கெனவே நினைவிடம் உள்ள நிலையில் இரண்டாவதாக ஒன்றை அமைக்க அரசுக்கு உத்தரவிடுவது சட்டபூர்வமாகவோ இருக்காது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து