முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 

பிப்ரவரி 20-ம் தேதி பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப்பில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு நேற்று விடை கிடைத்துள்ளது. கடந்த 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே தேர்தலைச் சந்தித்ததுதான் என்றும் ஒரு பார்வை உள்ளது. 

ஆனால், இந்த முறை முதல்வர் வேட்பாளர் யார் என்று தற்போதே அறிவித்துள்ளது. கடந்த சில நாட்கள் முன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே தேர்வு செய்யும் வகையில் இலவச தொலைபேசி எண்களை அறிவித்திருந்தார் அரவிந்த் கேஜ்ரிவால். அந்த பொது வாக்கெடுப்பின்படி ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

48 வயதாகும் பகவந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதை விட, காமெடி நடிகராக அறியப்படுகிறார் பகவந்த். தனது கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்ட பகவந்த், நிறைய கல்லூரி நிகழ்வுகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது. பகவந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நையாண்டி. பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து காண்பிப்பார்.

இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. சில பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. இப்படி புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு அவர் காமெடியன் பட்டத்தை துறந்து முழு நேர அரசியல்வாதியாக மாறினார். ஆம் ஆத்மி அவரின் முதல் கட்சி கிடையாது. சரியாக, ஒரு தசாப்ததுக்கு முன்னதாக 2011-ல் மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் பகவந்த்.

2014-ல் பஞ்சாப்பில் புதிய கட்சியாக கால்பதித்த ஆம் ஆத்மியில் இணைந்தார் பகவந்த். கட்சியில் இணைந்த உடன் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது ஆம் ஆத்மி. தனது சொந்த தொகுதியான சங்ரூரில் களம் கண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலிதளத்தின் தலைவரான சுக்தேவ் சிங் திண்ட்சாவை நரேந்திர மோடி அலைக்கு மத்தியிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார் பகவந்த். இதே தொகுதியில் 2019 தேர்தலிலும் வென்று மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

2014 வெற்றி அவரை ஆம் ஆத்மியில் முக்கிய நபராகவும், கெஜ்ரிவாலின் நம்பிக்கையாகவும் நல்ல நண்பராகவும் ஆக்கியது. 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பகவந்த் தோல்வியை தழுவினாலும், கட்சியில் அவருக்கு இருந்த செல்வாக்கு, கெஜ்ரிவாலின் நல்ல நட்பு ஆகியவை அவருக்கு கைகொடுத்தது. இதனால் 2017 தேர்தலுக்குப் பிறகு, பகவந்த் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்றுவரை ஆம் ஆத்மியின் பஞ்சாப் முகமாக இருக்கும் பகவந்த், தற்போது முறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து