முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலாகலமாக நடைபெற்ற சென்னை வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : கோயிலுக்கு வெளியே பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலுக்கு வெளியே இருந்து பக்தர்கள் இந்த விழாவை கண்டுகளித்தனர்.

பிரசித்தி பெற்ற சென்னை வடபழனி முருகன் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேக விழா ஆகம விதிப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆறுகால யாகசாலை பூஜை முழுமையாக நடத்தப்பட்டு, கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நிறைவு பெற்றது. 

கும்பாபிஷேக விழாவிற்காக முருகப்பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் ஆக மொத்தம் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. அதில், கங்கை, யமுனை, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகள் மற்றும் ராமேஸ்வரம் தீர்த்த கிணறு, அறுபடை முருகன் திருத்தலங்கள் என பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கோவில் கோபுரத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட தங்க கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.  

இதற்கிடையில் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை நடத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. 

கும்பாபிஷேகத்தின் போது, அர்ச்சகர்கள், அர்ச்சகர்களின் உதவியாளர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், நகரத்தார்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது. 

கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அருகில் உள்ள பொதுமக்கள் பலர் தடைகளை மீறி கோவிலுக்கு வருகை தந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களை அங்கு அனுமதித்தனர். கோவிலின் வாசல் மூடப்பட்டிருந்த நிலையில், வெளியே நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேக விழாவைக் கண்டு களித்தனர்.

கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், டி.வி மற்றும் இணையதளம் மூலம் கும்பாபிசேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வடபழனி முருகன் கோவிலில் இன்று  (திங்கட்கிழமை) முதல் 27-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து