முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதன்மையானவர்கள் தி.மு.க.வினர்: சேலம் பிரச்சாரத்தில் எடப்பாடி தாக்கு

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதன்மையானவர்கள் தி.மு.க.வினர் என்று சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க.த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் சேலம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தால் உங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்திருப்பார்கள். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீர், புதிய சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும்.  சமீபத்தில், அ.தி.மு.க. ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த வெற்றி பெற்ற கவுன்சிலரை தி.மு.க.வினர் கடத்திச் சென்றார்கள்.

தி.மு.க. செல்வாக்கு மக்களிடத்திலே சரிந்து விட்டது. நேரடியாக அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு, போட்டியிடுபவர்களை மிரட்டுவது, வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்களை மிரட்டி அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது இதெல்லாம் வெக்கக்கேடான வி‌ஷயம். இப்படி அராஜகத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்கள் தலைவர்களாக வந்தால் இங்கு நல்லது நடக்குமா?. நடக்காது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் எந்தப் பிரச்சினைக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக இருந்தார்கள். ஆனால் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் மக்களின் சுதந்திரம் பறிபோய்விடும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

நான் முதல்வராக இருந்த பொழுது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடிநீரின் தேவை அதிகரித்ததால் இப்பகுதி மக்களுக்கு தங்குதடையின்றி தேவையான பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக 652 கோடி மதிப்பீட்டில் புதிதாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதைக்கூட தி.மு.க அரசு கொண்டு வந்ததாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வில் பேசுவது எல்லாம் பொய். தி.மு.க.வில் தொண்டர் முதல் தலைவர் வரை பொய் தான் பேசுவார்கள். தி.மு.க.வின் மூலதனம் பொய் மட்டும்தான், பொய்யை வைத்துதான் கட்சியே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களை ஏமாற்றுவதில் அவர்கள் முதன்மையானவர்கள். ஓட்டு போட்ட பிறகு மக்களை மறக்கின்ற ஒரே கட்சி தி.மு.க. கட்சி மட்டும்தான். சொன்னதை அனைத்தையும் செய்தது அ.தி.மு.க.வின் அம்மா அரசு மட்டுமே. எனவே கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை மக்களிடம் தைரியமாக எடுத்துக்கூறி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவர் அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து