முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயகுமார் கைது விவகாரம்: அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 28-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

ஒரு குற்றச் செயல் நடைபெறுகிறது என்று சொன்னால் அதை தட்டிக் கேட்பதற்கும், அந்தக் குற்றம் நடைபெறா வண்ணம் குற்றச் செயலில் ஈடுபடும் நபரைக் கைது செய்வதற்கும் எல்லா நபருக்கும் உரிமை உள்ளது என்று சட்டம் சொல்லுகிறது. அதன் அடிப்படையில், கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்தபோது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது நியாயமான செயல். 

சட்டத்தை சட்டமாகவும், நீதியை நேர்மறையாகவும் சந்திக்க இயலாத தி.மு.க. அரசு, காவல் துறையை ஏவல் துறையாக்கி இது போன்ற பழிவாங்குதல் நடவடிக்கையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.  தி.மு.க.வின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிக்கின்ற விதத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.  இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை நடத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து