முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவிடம் தோல்வி: சி.எஸ்.கே வீரர்கள் மீது எம்.எஸ்.டோனி அதிருப்தி

வியாழக்கிழமை, 5 மே 2022      விளையாட்டு
dhoni-2022-05-05

Source: provided

மும்பை: பேட்ஸ்மேன்ஷிப் சற்று சிறப்பாக இருந்திருந்தால் கடைசி சில ஓவர்களில் எங்களுக்கு அதிக ரன் தேவைப்பட்டிருக்காது என சென்னை அணி கேப்டன் டோனி கூறியுள்ளார்.

சென்னை தோல்வி...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது. மஹிபால் லோம்ரோர் 42 ரன்னும், டுபெலிசிஸ் 38, விராட் கோலி 30 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தீக்சனா 3 விக்கெட் கைப்பற்றினார்.

160 ரன்கள்...

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில் தொடக்கம் நன்றாக இருந்தது. தொடக்க ஜோடி பிரிந்ததும் சீரான இடைவெளியில் விக்கெட் டுகள் சரிந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்னே எடுக்க முடிந்தது. தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:

கட்டுப்படுத்த... 

நாங்கள் அவர்களை (பெங்களூர் அணி) 170 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது நன்றாக இருந்தது. உண்மையில் எங்களை வீழ்த்தியது பேட்ஸ்மேன்ஷிப். இலக்கை சேசிங் செய்யும்போது ரன் எவ்வளவு தேவை, பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் உங்கள் உள்ளுணர்வை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் ஷாட்டை விளையாடுவதை விட நிலைமை என்ன கேட்கிறது என்பதை பார்க்க முயற்சிக்க வேண்டும்.

எளிதில் கவன சிதறல்...

பேட்ஸ்மேன்ஷிப் சற்று சிறப்பாக இருந்திருந்தால் கடைசி சில ஓவர்களில் எங்களுக்கு அதிக ரன் தேவைப்பட்டிருக்காது. நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து கொண்டே இருந்தோம். இந்த விஷயங்களை நீங்கள் கவனித்து கொண்டால் சேசிங் என்பது கணக்கீடாகவும், முதலில் பேட்டிங் செய்வது உள்ளுணர்வு பற்றியதாகவும் இருக்கும். என்ன தவறு இருக்கிறது என்று நாம் தொடர்ந்து பார்க்க வேண்டும். உங்களிடம் எத்தனை புள்ளிகள் உள்ளன என்பதில் கவனம் சிதறுவது எளிது. புள்ளிகள் அட்டவணையில் எந்த இடத்தில் இருந்தீர்கள் என்பதை விட, உங்களது செயல்முறை முக்கியமானது. அந்த விஷயங்களை கவனித்து கொண்டால் புள்ளி அட்டவணை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்’ என்றார்.

சரியான திசையில்... 

பெங்களூர் கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது, ‘சற்று சவாலான ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் எடுத்தோம். பேட்டிங் வரிசையில் நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். சென்னை அணி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடியது. அதன்பின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியவுடன் நாங்கள் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம்” என்றார்.

7-வது தோல்வி...

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கி உள்ளது. எஞ்சிய 4 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினமாக இருக்கும். பெங்களூரு அணி 6வது வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து