முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      இந்தியா
Kashmir 2022 04 01

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் ஸ்ரீசந்த் டாப் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த, தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தினர்.

ஆனால், இதனை ஏற்காத தீவிவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இன்னும் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை என்றும் காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், வெடிப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து