முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு ஜோகோவிச் தகுதி

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      விளையாட்டு
Djokovic 2022 05 13

Source: provided

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில்  டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்

இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற நேர் செட் கணக்கில்  ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம்  ஆயிரமாவது மாஸ்டர் போட்டி ஒற்றையர் பிரிவில் 16வது முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

____________

பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல். தொடரிலிருந்து  விலகல்..!

ஐ.பி.எல் 15வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த தொடரில் கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி ,7 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை. 

இந்நிலையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கபப்டுகிறது.

____________

சென்னை கேப்டன் டோனி குறித்து ஹைடன் கணிப்பு..! 

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், ஐ.பி.எல் 2022 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து சிஎஸ்கே வெளியேற்றப்பட்ட பிறகு சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹேடனின் கருத்துக்கள் வெளியாகின. 

“விக்கெட்டுகளுக்கு இடையே டோனி எவ்வளவு வேகமாக ஓடுகிறார்! 20 ஓவர் அளவிலான போட்டிக்குள் ஒரு சாதாரண விளையாட்டு வீரரின் வயதைத் தாண்டி ஒரு இளைஞனை போல விளையாடுகிறார். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அவரால் முடியும், ஏனெனில் அவர் நிச்சயமாக தனது அணிக்காகத் விளையாடுவார். தலைமைக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது! டோனி போன்ற ஒருவர் தலைமையில் இருக்கிறார். அது சென்னை அணிக்கே நிலைத் தன்மையை கொண்டு வரும்.”என்று மேத்யூ ஹைடன் கூறினார்.

____________

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: ரிஷி தவன்

நடப்பு ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருபவர் ரிஷி தவன். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாவதே தனது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிஷி தவன் கூறுகையில், " நான்கு வருடங்கள் ஐ.பி.எல்லில் சிறப்பாக விளையாடிய பிறகு இந்திய அணியில் அறிமுகமானேன். பின்னர் நீக்கப்பட்டேன். ஐந்து ஆண்டுகளாக யாரும் என்னை தேர்வு செய்யவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எனது செயல்பாடுகள் கவனிக்கப்படவில்லை. இந்திய அணிக்கு மீண்டும் வருவதே எனது நோக்கம், அதைச் செய்ய நீங்கள் சரியான விதத்தில் சத்தம் போட வேண்டும் என்றார்.

____________

நடிகை நயன்தார படத்தை தயாரிக்கிறாரா டோனி..?

நடிகை நயன்தாராவை வைத்து டோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் புதிய படத்தை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த தயாரிப்புப் பணியில் ரஜினியின் பள்ளியில் பணியாற்றி வந்த சஞ்சய் என்பவர் இணைந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியான மறுநாளே டோனி எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் சார்பில் ஒரு மறுப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். 

அந்த அறிக்கையில், நாங்கள் தற்போது சஞ்சய் என்ற நபருடன் எந்த படத்தயாரிப்புப் பணியிலும் ஈடுபடவில்லை. சஞ்சய் என்ற பெயரில் நாங்கள் யாரையும் பணியமர்த்தவில்லை. அந்த பெயரில் வெளியாகும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். இருப்பினும் சுவாரஸ்மான திரைப்படங்களை எடுப்பதற்கான பணிகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படத்தயாரிப்பு உறுதியானபின், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். டோனி நிறுவனத்திற்காக விக்னேஷ் சிவன் ஒரு விளம்பரப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

____________

முடிவை மாற்றிய நடுவர்: ட்ரோல் செய்த ரசிகர்கள்

98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் பலமான கூட்டணி அமைத்தனர் திலக் வர்மா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன். பவர் பிளேயின் கடைசி ஓவரை சிமர்ஜித் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஹிருத்திக் ஷோக்கீன், இறங்கி வந்து ஆட முயன்றார். ஆனாலும் அதை மிஸ் செய்திருந்தார் அவர். அதற்கு வொய்ட் சிக்னல் கொடுக்க முயன்றார் நடுவர் சிர்ரா ரவிகாந்த் ரெட்டி. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அப்பீல் செய்தனர். அதையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்ட நடுவர், அவுட் என அறிவித்தார்.

இருந்தாலும் DRS ரிவ்யூ எடுத்து தப்பினார் ஹிருத்திக் ஷோக்கீன். தொடர்ந்து ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. மோசமான அம்பயரிங், நல்ல வேளையாக DRS ரிவ்யூ வேலை செய்தது, நடுவர் அவுட் என அறிவிக்க காரணமே டோனி தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர். முன்னதாக, இந்த போட்டியில் மின்தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவான் கான்வே, DRS ரிவ்யூ ஆப்ஷனை எடுக்க முடியாமல் வெளியேறினார். அது சர்ச்சையாக எழுந்திருந்தது.

____________

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார் பிருத்வி ஷா..! 

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பிரித்வி ஷா காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மே 1 அன்று கடைசியாக லக்னோவுக்கு எதிராக பிரித்வி ஷா விளையாடினார்  அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் பிருத்வி ஷாவுக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து