முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
CM-4 2022 05 18

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும்  24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு சரக்கு கப்பலில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.  நேற்று அனுப்பப்பட்ட முதற்கட்ட உதவிப்பொருட்களின் மதிப்பு 45 கோடி ரூபாய் ஆகும். 

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில்  சிக்கித் தவித்து இன்னலுறும்  இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

 அதனைத் தொடர்ந்து,  அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு 31.03.2022 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய அரசின்  வெளியுறவுத் துறை அமைச்சரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதெடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதுடன் 15.04.2022 அன்று கடிதமும் எழுதி நினைவூட்டினார். 

இந்த நிலையில்  தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திட 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய  அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினை சீரிய முறையில் செய்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழக அரசு மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய   உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 13ம் தேதியன்று இதற்கான ஒன்றிய அரசின் இசைவு பெறப்பட்டது.  

அதன் தொடர்ச்சியாக, இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை TAN BINH 99 என்ற சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்வினை முதல்வர் நேற்று சென்னை துறைமுகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரித் தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் முனைவர் வெங்கடேசுவரனிடம் முதல்வர்  வழங்கினார்.     

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு,  நாசர், செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ்,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக தலைவர் தீபக் ஜேக்கப், சென்னை துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து