முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்பு: கட்டித்தழுவி கண்ணீர் மல்க ராமதாஸ் வாழ்த்து

சனிக்கிழமை, 28 மே 2022      அரசியல்
Anbumani 2022-05-28

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்று கொண்டார். 

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர். இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. 

பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக ஜி.கே.மணி அறிவித்தார். 

25 ஆண்டுகளாக பாமக தலைவராக ஜி.கே.மணி இருந்து வந்தார். அன்புமணியை கண்ணீர்மல்க கட்டித் தழுவி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார். அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து