முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய நபர்களுக்கும் மட்டும் அனுமதி: இயக்குனர் விக்னேஷ் - நயன்தாரா திருமணம் விமர்சையாக நடந்தது

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      சினிமா
Nayantara-2

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவர்களின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான விக்னேஷ் சிவன், தனது இரண்டாவது படமாக ‘நானும் ரௌடிதான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மலர்ந்தது. அதன் பின் இருவரும் இணைந்து தனி வீட்டில் வாழ்ந்து வந்ததுடன்,‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் திரைப்படங்களைத் தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என சேர்ந்து பணிபுரிந்து வந்தனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகும் சமயத்தில் விரைவில் நயன்தாராவுக்கும், தனக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்பதைக் கூறி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் திருமணத் தேதியையும் அறிவித்தார் விக்னேஷ் சிவன்.

அதன்படி நேற்று இருவரின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நண்பர்கள் உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடனும், அன்புடனும் திருமணம் நடந்தாலும், இதிலும் பாலிவுட் முறையிலான நடைமுறையைக் கையாண்டிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும். அதில் முதலாவது இந்த திருமணத்தை பிரத்யேகமாக பதிவு செய்ய நெட்ஃப்ளிக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மிகப் பெரிய தொகை ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு அளித்திருக்கிறது.

சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, இயக்குநர் மணிரத்னம், மோகன்ராஜா, சுந்தர் சி, நெல்சன், இயக்குநர் விஜய், கௌதம் மேனன், ஆனந்த் ஷங்கர், மலையாள நடிகர் திலீப், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திட்டமிடப்பட்ட திருமணம், நேற்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நடந்தது.

இந்நிலையில், திருமணம் முடிந்ததை அறிவிக்கும் வகையில் நயன்தாராவுடன் உள்ள புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கடவுள், பிரபஞ்சம், எங்களது பெற்றோர் மற்றும் சிறந்த நண்பர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வின்போது மணமகன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்ததாகவும், அதன்பின்னர் மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலிகட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துடன், நடிகை நயன்தாரா ‘சந்திரமுகி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகியப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ‘குசேலன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலுக்கும் ரஜினியுடன் நயன்தாரா சேர்ந்து நடித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்ததன் காரணமாக, தங்களது வாழ்வின் மிக முக்கிய தருணத்தில், ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து